எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" -பெரிய ஐங்கரன்
எஸ்.சிவசேகரனின் "போதிக்காடு" - பு த்தனுக்கு ஞானம் கொடுத்த ஒற்றைப்போதிமரத்தை, பெரும்காடாக்கி நண்பனுக்கு பரிசளிக்கிறார் கவிஞர் சிவசேகரன். ஞானமடைவதற்குரிய வழிமுறையையும் நண்பனுக்குப் போதிக்கிறார். " நீ அறிவாயா புத்தனாதல் மிக மிக இலகு என்னோடு வா என் வீடு அருகில்தான் என் ஊரை விழுங்கிய போதிக்காட்டையே உனக்குப் பரிசளிக்கிறேன் அமர்ந்து கொள்" கவிஞன் பரிசளிக்கும் போதிக்காடு, ஒட்டுமொத்தமாக ஊரை விழுங்கிய பெரும் போதிக்காடு. இந்தப் போதிக்காடு, வானுயர வளர்ந்து கிளைபரப்பிச் செழித்துப் பச்சைப்பசேலென குளிர்மையும் நிழலும் தரும் காடல்ல. தரைமட்டமாய் விழுந்து தகிக்கும் சுடுகாடு. இறந்த பின்னர் எல்லோரும் போகும் சமரசம் உலாவும் சுடுகாடல்ல இது. வாழும்போதே கொல்லப்பட்ட பொதுஜனங்களின் பாரம்பரிய வாழ்விடந்தான், இந்தச் சுடுகாடு. போதிமரத்தில் ஒளி பெற்ற புத்தனை வழிபடும் பக்தர்கள், தீ மூட்டி எரித்த புனிதமான இடந்தான், இந்தச் சுடுகாடு. போதி மரத்தில் பெற்றுக்கொண்ட ஒளியால் இவ்வூரை எரித்து ஒளியூட்டி குளிர் காய்ந்தார்கள். அதனால், "போதிக்காடு" இவ்வூரின் காரணப்பெயர் ஆயிற்ற...